சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வே என் உணர்வு என தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜா, பொள்ளாச்சி சம்பவம்போல இன்னொரு சம்பவம் நடந்துவிடக்கூடாது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மாணவ-மாணவிகளிடம் இசையின் வல்லமை பற்றியும், தான் கடந்து வந்த பாதை குறித்தும் எடுத்துரைத்து வரும் இளையராஜாவுக்கு, சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அதில் கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடிய இளையராஜாவிடம் செய்தியாளர்கள் பொள்ளாச்சி சம்பவம் குறித்து கருத்து கேட்டதற்கு, தமிழ்நாட்டின் மக்களின் உணர்வுகள் எப்படி இருக்கோ, அதோடதான் நானும் இருக்கேன்.
தமிழ்நாட்டு மக்கள் என்ன சொல்றாங்க?" என்று செய்தியாளர்களிடம் இளையராஜா திரும்ப கேட்க, அதற்கு செய்தியாளர், இன்னொரு முறை இப்படி ஒரு சம்பவம் எதுவும் நடந்துடக்கூடாதுன்னு மக்கள் சொல்றாங்க" என்று பதிலளித்தார். "இதேதான் என் உணர்வும். இந்த விஷயத்தில் தமிழக மக்களுடன் நானும் உள்ளேன்" என்று தெரிவித்தார் இளையராஜா.