காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் பறிபோன தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டுத்தந்தவர் ஜெயலலிதாதான் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
மதுரை விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணி, திமுக-காங்கிரஸ் ஆகிய இரண்டு பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. ஏற்கெனவே, காங்கிரஸ்- திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தின் பல்வேறு ஜீவாதார உரிமைகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டபோது, அதை தடுத்து நிறுத்தும் செயல்களில் திமுக- காங்கிரஸ் ஈடுபடவில்லை.ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இல்லாத நேரத்திலும், தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளைப் பெற்றுத் தருவதில் சமரசமின்றி செயல்பட்டார். அதிமுக, திமுக இரு அணிகளின் செயல்பாடுகளையும் எடை போட்டு பார்த்தால், ஜெயலலிதா தலைமையிலான அணி தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பறிக்கும் செயல்களைத் தடுத்தும் நிறுத்தும் சக்தியாக செயல்பட்டு வந்தது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தும்கூட, அதற்கு அரசாணை பெற்றுத்தர முடியாத அரசாகத்தான் அன்றைய திமுக - காங்கிரஸ் அரசு இருந்தது. அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்னையை உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் சென்று சட்டப்போராட்டம் நடத்தியதால் தான், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் இடம்பெற்றது. தமிழகத்தின் உரிமையும் சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்டது. எனவே, நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக அணி மாபெரும் வெற்றி பெறும்.தேனி மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை அது அதிமுகவின் இரும்புக்கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் கூட தமிழகத்தில் அதிமுக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே தொகுதி தேனி. எனவே அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.