கெட்டுப்போன ரத்தம் செலுத்தப்பட்டு 15 கர்ப்பிணிகள் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர், எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட இயக்குநர் ஆகியோர் 2 வாரத்துக்குள் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது.
அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் கடந்த 4 மாதங்களில் 15 கர்ப்பிணிகள் மரணமடைந்துள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது.
தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகள் மூலம் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தின் மூலம் 15 கர்ப்பிணிகள் உயிர் இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.
முதற்கட்ட விசாரணையில், தகுதியற்றதும், கெட்டு சிதைந்து போன ரத்தத்தை ஏற்றியதால், கர்ப்பிணிகளும், குழந்தை பெற்ற தாய்மார்களும் இறந்துபோன விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஸ் தெரித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஆய்வுக்கூட தொழில்நுட்ப வல்லுனர்கள் என 12க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.