பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதம் வெளியிடப்படுமா?
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக துறைகள், உறுப்புக் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரம் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.
கல்லூரி முன்னாள் மாணவர்களிடம் விசாரிப்பது, கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் தகுதி உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளை மாணவர்களும், பெற்றோரும் தேர்வு செய்கின்றனர். இந்தக் காரணிகளில் முக்கியப் பங்கு வகிப்பது பொறியியல் கல்லூரியின் மாணவர் தேர்ச்சி விகிதம்.
எனவே, பொறியியல் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாக, மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளின்
பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொறியியல் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாக பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரத்தை வெளியிட உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், இந்தப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு வந்தது. இந்த நிலையில், 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை தொடங்கிவிட்ட நிலையில், இந்த தேர்ச்சி விகிதப் பட்டியல் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர்களி டையே எழுந்துள்ளது.
இப்போது 2017-ஆம் ஆண்டு வரையிலான மாணவர் தேர்ச்சி விவரங்கள் மட்டுமே அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. எனவே, 2018-ஆம் ஆண்டுக்கான விவரங்கள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2017-ஆம் ஆண்டு மாணவர் தேர்ச்சி விவரம்: அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 497 பொறியியல் கல்லூரிகளுக்கான 2017-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், பெரம்பலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 3 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. 29 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. மேலும், 141 பொறியியல் கல்லூரிகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 61 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி விகிதம் உள்ளது.