கொடைக்கானலில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் சீசன் களை கட்டியது.
இங்குள்ள சுற்றுலா இடங்களான வெள்ளிநீர் வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், குணாகுகை, மோயர் பாயிண்ட், சிறுவர் பூங்கா, பாம்பார் அருவி, பியர் சோழா அருவி, கோக்கர்ஸ்வாக், தாவரவியல் பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.
இங்கு அவ்வப்போது லேசான சாரலும், மேகமூட்டமும் நிலவியதால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரியும், ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூல்: கொடைக்கானலில் ஒரு சில நாள்கள் தங்கி சுற்றுலா இடங்களையும் மேல்மலைப் பகுதிகளிலுள்ள கூக்கால் ஏரி, மன்னவனூர் ஏரி, ஆட்டுப் பண்ணை, பூம்பாறையிலுள்ள குழந்தை வேலப்பர் கோயில் உள்ளிட்ட இடங்களைப் பார்க்க தற்போது சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் கொடைக்கானல் பகுதியில் பல்வேறு பிரச்னைகளால் 300-க்கும் மேற்பட்ட காட்டேஜ்கள் பூட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள தனியார் காட்டேஜ்களில் கூடுதலாக கட்டண வசூல் செய்யப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். மேலு,ம் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் சிலர் தாங்கள் வந்த வாகனங்களிலும், ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள கடைகளிலும் தங்கிச் செல்கின்றனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் பூட்டப்பட்ட காட்டேஜ்களும் அனுமதியில்லாமல் இயங்குவதோடு அதிகமான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்: கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வருவதால் ஏரிச்சாலை, செவண்ரோடு, கோக்கர்ஸ்வாக் சாலை, லாஸ்காட் சாலை, அப்பர்லேக் வியூ சாலை, அப்சர்வேட்டரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் சிரமப்பட்டனர். கொடைக்கானலில் இயற்கை எழிலை மறைத்தும், மலைச்சாலைகளிலும் தற்போது கடைகள் அமைத்து வருகின்றனர்.
கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் ஏரிச்சாலை முதல் பெருமாள் மலை வரையிலும் நூற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.