பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில்தான் அதிக வாக்காளர்கள் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற சீட் ஆப் டிவைன் என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி செய்தியாளர்களிடம் கூறியது: வாக்குப் பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையை கொண்டுவருவது பைத்தியக்காரத்தனம்.
தேர்தலில் தோல்வியடையும் அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தை குறை சொல்லி வருகிறார்கள். 2004 -ஆம் ஆண்டில், முதன் முதலாக தமிழகத்தில் தான் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போதே சில அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீதும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பத்தன்மை மீதும் குற்றம் சாட்டினர்.
வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்துவதால் எந்த ஒரு வாக்கும் செல்லாத வாக்காகப் பதிவானதில்லை. ஆதாரங்களின் அடிப்படையிலேயே வேலூரில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து இடங்களிலும் வாக்காளர்கள் வாக்களிக்க பணம் வாங்குகிறார்கள்.
தமிழகத்தில் வாக்குக்குப் பணம் பெறுவது அதிக அளவில் நடைபெறுகிறது. இதன்படிப் பார்த்தால் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என்றார்.