மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்பார் என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். வல்லநாட்டில் திறந்த வேனில் நின்று அவர் பேசியது: மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மே 23 -ஆம் தேதி நடைபெறப்போகும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு பாஜக அரசு முடிவுக்கு வந்தபின், ராகுல் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்பார். இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதன் மூலம் எடப்பாடி அரசும் முடிவுக்கு வந்து, திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். அப்போது, திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார் அவர். இதையடுத்து, தெய்வச்செயல்புரம், அக்கநாயக்கன்பட்டி, பரிவல்லிகோட்டை ஆகிய இடங்களில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
முன்னாள் அமைச்சர் வீ.கருப்பசாமி பாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணணன் எம்எல்.ஏ , டி.பி.எம். மைதீன்கான் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, திமுக நிர்வாகிகள் உமரி சங்கர், சொர்ணகுமார், ஆறுமுகபெருமாள் உள்பட பலர் உடன் சென்றனர்.