சென்னை: மக்கள் எடுத்துவிட்ட முடிவைத் தாமதப்படுத்தலாமே தவிர, தடை செய்ய முடியாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் சுட்டுரையில் கூறியிருப்பது:
சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கின்றன மத்திய, மாநில அரசுகள். மக்கள் எடுத்துவிட்ட முடிவைத் தாமதப்படுத்தலாமே தவிர, தடை செய்ய முடியாது. 12 ஆழ்வார்களோ, 63 நாயன்மார்களோ ஹிந்து என்கிற மதக்குறிப்பைச் சொல்லவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவரால் ஹிந்து என நாமகரணம் செய்யப்பட்டோம்.
ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை? நாம் இந்தியர் என்கிற அடையாளம் சமீபத்தியதுதான் எனினும், காலம் கடந்து வாழக்கூடியது.
நாம், நம் அகண்ட தேசத்தை மதத்துக்குள் குறுக்க நினைப்பது வர்த்தக, அரசியல் மற்றும் ஆன்மிக ரீதியாகவும் பிழையான தேர்வாகும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்குப் பழமொழி சொல்லியிருக்கிறோம். கோடி என்றால் உடனே பணம் ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல. அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி. தமிழா, நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள் என்று அவர் கூறியுள்ளார்.