புதுக்கோட்டை: கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் எனப் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சனிக்கிழமை புகார் அளித்தனர்.
புதுக்கோட்டை மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் எஸ். மூர்த்தி நகரக் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது செய்தியாளர்கள் சந்திப்பில், கண்ணியக்குறைவாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறும் வகையிலும் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.
ஒரு கருத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ கருத்து கூற அனைத்து குடிமகன்களுக்கும் உரிமை உள்ளது. இதன்படி கமல்ஹாசன் தெரிவித்த கருத்து மீது ராஜேந்திரபாலாஜி எந்த மறுப்பையும் கூறலாம். ஆனால், நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறுவது சட்டப்படி தவறானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.