ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான நந்தகுமாருக்கு ஜூன் 6ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சட்ட விரோதமாகக் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன்பானு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியாளர் சாந்தி, பெங்களூரு அழகுக் கலை நிபுணர் ரேகா மற்றும் இடைத் தரகர்கள் லீலா, ஹசீனா என்ற நிஷா, அருள்சாமி, செல்வி உள்பட 10 பேர் ராசிபுரம் போலீஸார் மற்றும் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, இவ்வழக்கு தொடர்பாக அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் அனுமதி கேட்டதில், 5 நாள்களுக்கு விசாரிக்க நாமக்கல் நீதிமன்றம் அனுமதித்தது. இந்த நிலையில் 5 நாள் சிபிசிஐடி காவல் முடிந்த நிலையில் நந்தகுமாரை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை ஜூன் 6ஆம் தேனி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.