டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதைக் கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களவை பொதுத் தேர்தல் காரணமாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது, தேர்தல் முடிவடைந்ததையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால், மக்கள் குறைதீர் கூட்டம் வழக்கம்போல் நிகழ்வார திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டியக்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி. அழகர்ராஜ் தலைமையிலான நிர்வாகிகள் அளித்த கோரிக்கை மனு: திருவாரூர் அருகே திருக்காரவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, அத்திட்டத்தை டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்துவதை, கைவிட மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கஜா புயலால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயிகள் வாங்கிய கடனை, வட்டியுடன் உடனடியாக திருப்பிச் செலுத்த நிர்ப்பந்திக்கின்றன. தற்போது, விவசாயிகள் விவசாயக் கடன்களை செலுத்த இயலாத நிலையில் உள்ளதால், அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய பரிந்துரைக்க வேண்டும்.
எலித்தொல்லை காரணமாக, நெல் மற்றும் பயிறு சாகுபடியில் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.