300 பேருக்கு இலவச உயர்கல்வி: பாரிவேந்தர் எம். பி. அறிவிப்பு
தேர்தல் வாக்குறுதிப்படி, பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 300 மாணவ, மாணவியருக்கு எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தில் இலவச உயர்கல்வி அளிக்கப்படும் என டி.ஆர். பாரிவேந்தர் எம்பி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, திருச்சியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரம்பலூர், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகளை தொகுதிக்கு 50 பேர் வீதம் தேர்வு செய்து அவர்களுக்கு எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தில் இலவச உயர்கல்வி, அளிக்கப்படும். அதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. திமுக, கம்யூ, மதிமுக, விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகளைக் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படுகிறது.
இதில், ஜாதி, மத, பேதமற்ற வகையில் மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுவர். அதேபோல் வேலைவாய்ப்பும் வழங்குவதாக அறிவித்திருந்தேன், அதற்காக தொகுதிக்கு 50 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 6 தொகுதியிலும் ஆண்டுக்கு 300 பேருக்கு எஸ்.ஆர்.எம். குழுமத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.
குடிநீர்ப் பிரச்னைகளை எனது தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களவைத் தொகுதி உறுப்பினர் நிதியில் நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்படும். மக்களவையில் காவிரிநீர்ப் பிரச்னை குறித்து பேசி தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாவதாக, விவசாய உற்பத்திப் பொருள்களை விவசாயிகளின் இல்லத்துக்கே சென்று , விளைபொருள்களுக்கு நியாயமான விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படும். இவை தவிர, புதிதாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும், புதிய ரயில் பாதைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.