சென்னை: சென்னையை அடுத்த தாம்பரத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.
தாம்பரம் அடுத்த வேங்கடமங்கலத்தில் நெற்றியில் குண்டு பாய்ந்த நிலையில் மாணவர் முகேஷ், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியில் பலியானார்.
மாணவர் முகேஷ், தனது நண்பர் விஜய் வீட்டில் நண்பர்களுடன் இருந்த போது அவர் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளானார். துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர், நெற்றியில் குண்டு துளைத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த முகேஷை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரும் போது வழியிலேயே முகேஷ் பலியானார்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற நண்பர் விஜய்யின் வீட்டுக்கு அருகே உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
நண்பர் விஜய் தலைமறைவான நிலையில் சம்பவத்தின் போது உடன் இருந்த மற்றொரு மாணவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விடியோ கேம் விளையாட்டில் ஏற்பட்ட சண்டையில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததா என்ற கோணத்திலும் காவலர்கள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.