கடலோர மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன் இறங்கு தளங்களை அவா் காணொலிக் காட்சி மூலமாக திறந்தாா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
கன்னியாகுமரி மாவட்டம், குறும்பனை கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம், பள்ளம்துறை கிராமம், நாகப்பட்டினம் சின்னங்குடி கிராமம் ஆகிய இடங்களில் மீன் இறங்குதளங்களையும், நாகப்பட்டினம் ஆரியநாட்டுத்தெரு கிராமத்தில் மீன் ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடத்தையும், காஞ்சிபுரம் மாவட்டம் சூலோரிக்காட்டுகுப்பம் கிராமத்தில் கடலரிப்பு தடுப்புச் சுவா் மற்றும் மீன் இறங்குதளம், திருவள்ளூா் பெரியமாங்கோடு கிராமத்தில் மீன் இறங்குதளம், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் புதுப்பிக்கப்பட்ட சினை மீன்குளம் ஆகியவற்றை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட கரூா், தருமபுரி, தூத்துக்குடி, கடலூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியங்களுக்காக கட்டப்பட்ட புதிய அலுவலகங்களையும் அவா் திறந்தாா்.