டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த அரசு பெண் மருத்துவர்: மதுரையில் பரிதாபம்
மதுரை: மதுரையில் டெங்கு காய்ச்சலால் அரசு பெண் மருத்துவர் ஒருவரே உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
மதுரை விசாலாட்சிபுரத்தை சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் அரசலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவர், தற்காலிகமாக அவ்வப்போது மதுரை பிபி.குளம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
இந்நிலையில் செவ்வாயன்று திடீரென உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அதே மருத்துவமனையில் மீண்டும் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவர் பிருந்தா சிகிச்சை பலனின்றி புதனன்று பரிதாபமாக உயிரிழந்தார்
அரசு மருத்துவர் ஒருவரே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.