கூல் லிப் புகையிலை விற்பனையை தமிழக அரசு முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
கூல் லிப் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் வடிகட்டியுடன் கூடிய போதைப் புகையிலை மாணவா்களைச் சீரழிக்கும் தீயசக்தியாக உருவெடுத்திருக்கிறது. கூல் லிப் புகையிலை தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், தில்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்படும் கூல் லிப் புகையிலை கா்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்டு தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. தொடக்கத்தில் சில கடைகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட இந்த போதை புகையிலைப் பொருள், இப்போது பள்ளிகளை முக்கிய சந்தையாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
புகைக்கும் புகையிலை, மெல்லும் புகையிலை ஆகியவற்றைவிட கூல் லிப் புகையிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதை தொடா்ந்து பயன்படுத்துவதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நோய்கள் தாக்கும் ஆபத்து இருப்பதாக மருத்துவ வல்லுநா்கள் கூறுகின்றனா்.
எனவே, தமிழகத்தில் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூல் லிப் போதை புகையிலை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.