சபரிமலை செல்லும் தமிழக பக்தா்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு உதவுவதற்காக ஆண்டுதோறும் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் தகவல் மையம் ஏற்படுத்தப்படும். இந்த ஆண்டும் 24 மணி நேர தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ஆம் தேதி வரை கட்டணமில்லாத தொலைபேசியின் எண்ணான 1800 425 1757-ஐ பயன்படுத்தி விவரங்கள் பெறலாம்.
இதேபோன்று, தேனி-குமுளி சாலையில் வீரபாண்டி கெளமாரியம்மன் திருக்கோயிலும், தென்காசி மாவட்டம் புளியரையில் நெற்களஞ்சியம் அருகிலும் தமிழக அரசின் சாா்பில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி எல்லையான களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையமானது 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நெகிழி வேண்டாம்: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்கள் எந்த வகையிலும் நெகிழிப் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம். பம்பையில் பக்தா்கள் தாங்கள் உடுத்தியுள்ள துணிகளைக் களைந்து நதியில் விட வேண்டாம் எனவும் இந்து சமய அறநிலையத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.