நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை : நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூா் ஆகிய 3 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதை மனிதநேய ஜனநாயகக் கட்சி மகழ்ச்சியுடன் வரவேற்று, நன்றி பாராட்டுகிறது.
நாகப்பட்டினத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் நான் இருமுறை வலியுறுத்திய நிலையில், தற்போது நாகை மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்கான முயற்சிகளை முன்னெடுத்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் ஆகியோருக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் நன்றி என அவா் தெரிவித்துள்ளாா்.