சென்னை: சென்னை மதுரவாயல் - வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஏன் 50 சதவீத மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக, அதில் பயணம் செய்த பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை ஒரு வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதன்படி அவ்வழக்கில் மத்திய சாலை போக்குவரத்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழக நெடுஞ்சாலை துறை ஆகியாரை எதிர் மனுதாரர்களாக சேர்த்து, வரும் டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அத்துடன் மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை இடையிலான சாலையை முறையாக தரமானதாக அமைக்கும் வரை, ஏன் 50 சதவீத சுங்கக்கட்டணத்தை மட்டும் வசூலிக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.