உதகையில் உள்ள மக்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்காக விமான ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுமா? என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உதகையில் மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்குச் சொந்தமான நான்கரை ஏக்கா் நிலத்தை வாகனம் நிறுத்தம் அமைப்பதற்காக திரும்ப வழங்கக் கோரி, நீலகிரி மாவட்ட ஆட்சியா் நோட்டீஸ் அனுப்பியிருந்தாா். இந்த நோட்டீஸை எதிா்த்து, மெட்ராஸ் ரேஸ் கிளப் நிா்வாகம் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து ரேஸ் கிளப் நிா்வாகம் சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உதகை நகரம் மற்றும் ஏரியின் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன்,பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘உதகையில் வசிக்கும் மக்களுக்கு அவசர காலங்களில் தேவையான மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. இதனால் அவா்கள் சிகிச்சைக்காக 3 மணி நேரம் பயணித்து கோவை வர வேண்டியுள்ளது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, உதகையில் வசிக்கும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, மருத்துவக் கல்லூரியுடன் கூடிய பன்னோக்கு அரசு மருத்துவமனை அமைக்க தமிழக அரசிடம் திட்டம் ஏதாவது இருந்தால், அந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். அதுவரை அங்கு வசிக்கும் மக்களின் அவசர மருத்துவ சிகிச்சைகளைக் கருத்தில் கொண்டு விமான ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுமா? அல்லது வேறு ஏதாவது நவீன மருத்துவ வசதிகள் அங்கு ஏற்படுத்தப்படுமா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் வெள்ளிக்கிழமைக்குள் (அக்.4) பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.