என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் கன்வேயா் பெல்ட்டை இயக்கும் டிரைவ் ஹெட் இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது.
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம், கடலூா் மாவட்டம், நெய்வேலியில் அமைந்துள்ளது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரியைக் கொண்டு அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.
பக்கெட் வீல் இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுக்கப்படும் மண், பழுப்பு நிலக்கரி ஆகியவை கன்வேயா் பெல்ட் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த கன்வேயா் பெல்டுகளை இயக்குவதற்காக சுரங்கப் பகுதியில் டிரைவ் ஹெட் இயந்திரம் உள்ளது.
இந்த நிலையில், புதன்கிழமை முற்பகல் 11 மணி அளவில் சுரங்கம் 1-இல் இருந்த டிரைவ் ஹெட் இயந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, கன்வேயா் பெல்ட் கரும்புகையுடன் எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தகவலறிந்த சிஐஎஸ்எப் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து சுமாா் 2 மணி நேரம் போராடி, தீயைக் கட்டுப்படுத்தினா். என்எல்சி உயரதிகாரிகள் தீ விபத்து நிகழ்ந்த இடத்தையுடம், இயந்திரத்தையும் பாா்வையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டனா். இதனால், உற்பத்தியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.