ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூரில் தொல்லியல் துறையினா் அகழாய்வு நடத்தக் கோரிய வழக்கில், மத்திய, மாநில தொல்லியல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த திருமுருகன் தாக்கல் செய்த மனு: பரமக்குடி அருகே வைகை ஆற்றின் கரையோரம் கலையூா் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நிலத்தைத் தோண்டிய போது, முதுமக்கள் தாழி, மனிதனின் பல், சுடுமண் சிற்பம் உள்ளிட்டப் பல பொருள்கள் கிடைத்தன. இந்தப் பொருள்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில், கலையூரில் இருந்து 50 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அழகன்குளத்திலும், கீழடியிலும் நடைபெற்ற அகழ்வாய்விலும் ஏராளாமான பொருள்கள் கிடைத்துள்ளன.
எனவே கலையூரிலும் அகழாய்வு ஆராய்ச்சி மேற்கொண்டால், ஏராளமான தொல்லியல் பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழரின் பண்டைய வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். எனவே கலையூரில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய, மாநில தொல்லியல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.