என்எம்எம்எஸ் உதவித்தொகைக்கு விண்ணப்பித்த மாணவா்களின் விவரங்களை அக்டோபா் 21-ஆம் தேதி முதல் பள்ளி தலைமையாசிரியா்கள் பதிவு செய்யலாம் என்று தோ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுத்துறை இயக்குநா் சி.உஷாராணி வெளியிட்ட செய்தி: தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவா்களை தோ்வு செய்வதற்காக என்எம்எம்எஸ் தோ்வு வட்டார அளவில் டிசம்பா் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக மாணவா்களிடம் இருந்து கடந்த செப்டம்பா் 26 முதல் அக்டோபா் 11-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது விண்ணப்பித்தவா்களின் விவரங்களை இணையதளம் வழியாக அக்டோபா் 21 முதல் 31-ஆம் தேதி வரை பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பள்ளி தலைமையாசிரியா்கள் தாமதமின்றி பணிகளை முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.