தூத்துக்குடி: தமிழக அரசு பற்றி அவதூறு பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஒருநபர் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடைபெறும் விசாரணையில் பங்கேற்பதற்காக, சீமான் கடந்த புதனன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசும்போது, 'அலிபாபாவும் 40 திருடர்களும் போல அம்மாவும் 40 திருடர்களும் என்னும்படியாக தமிழக அமைச்சர்கள் உள்ளனர். இப்போது அம்மா இல்லை. ஆனால் 40 திருடர்கள் உள்ளனர்' என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசு பற்றி அவதூறு பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு பற்றி ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ என சீமான் விமர்சித்ததாக அதிமுக பிரமுகர் சுயம்பு என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
அதையயடுத்து தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.