தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கொலை குறித்த அனைத்துப் புள்ளி விவரங்களும் வெளியிடப்பட வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்ஜிகே. நிஜாமுதீன் வலியுறுத்தியுள்ளார்.
2017-ஆம் ஆண்டில் பதிவான குற்ற வழக்குகள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் மிக தாமதமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் சுற்றுச்சூழல், கொலை, கொள்ளை, சைபர் கிரைம் போன்ற குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. கும்பல் தாக்கி கொலை, மத சம்பந்தப்பட்ட கொலை, கட்ட பஞ்சாயத்துகளால் நிகழ்ந்த கொலைகள், செல்வாக்கு மிக்கவர்களால் செய்யப்பட்ட கொலைகள் ஆகியவை சேர்க்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
இந்தக் கொலைகளை மறைப்பதன் மூலம், கலவர நிகழ்வுகளை மத்திய அரசு ஆதரிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
எனவே, உடனடியாக, கொலைகள் குறித்த அனைத்து புள்ளிவிவரங்களும் வெளியிடப்படவேண்டும் என அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.