புதுச்சேரி போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் கடந்த வாரம் ஜிப்மர், பத்திரப்பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். இதனால், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கலக்கமடைந்தனர்.
இந்த நிலையில், புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வந்த சிபிஐ அதிகாரிகள், அங்கு மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பணியிலிருந்த போக்குவரத்துத் துறை உயரதிகாரியிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், சில ஆவணங்களை பறிமுதல் செய்து சென்றதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, போக்குவரத்துத் துறையில் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ள நிலையில், சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரியில் நடிகை அமலாபால் சொகுசு கார் வாங்கிய விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வந்து சென்றதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சிபிஐ சோதனையால் புதுச்சேரியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.