புவி வெப்பமயமாதலைக் கட் டுப்படுத்தும் விவகாரத்தில் இந்தியாவின் வேகம் போதாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
புவிவெப்பமயமாதல் என்ற பேரழிவை தடுப்பதற்கான செயல் திட்டங்களை வகுத்து, அறிவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு காலநிலை மாநாடு செப்டம்பர் 23-ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. அம்மாநாட்டுக்கு ஆயத்தமாவதற்காக ஆசிய - பசிபிக் மண்டலத்துக்கான மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நடந்து முடிந்தது. இதில், பசுமைத் தாயகம் அமைப்பும் பங்கேற்றது.
மாநாட்டில் பேசிய ஐ.நா. காலநிலை பிரிவு துணைச் செயலரும், இந்தியருமான ஓவைஸ் சர்மத் பாரீஸ் காலநிலை உடன்பாட்டின் இலக்குகளை முழுமையாக நிறைவேற்றினால் கூட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகும். இதனால் பயன் கிடைக்காது. மாறாக, உலகநாடுகள் அனைத்தும் இணைந்து வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான திட்டங்களை செப்டம்பர் 23-இல் ஐ.நா. மாநாட்டில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தாய்லாந்தில் நடைபெற்ற இந்த மாநாடும், நியூயார்க்கில் இம்மாதம் 23-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு காலநிலை மாநாடும் கூடிக்கலையும் தன்மை கொண்டவையோ, உலகத் தலைவர்கள் சுற்றுலா வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவையோ அல்ல. மாறாக, புவிவெப்பமயமாதல் என்ற பேரழிவிலிருந்து மனிதகுலத்தைக் காப்பதற்காக எழுப்பப்படும் கூக்குரல்கள் ஆகும்.
அதனால், இந்த மாநாட்டில் விடுக்கப்பட்ட அறைகூவலை அலட்சியம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டியது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலையாய கடமை. உலகைக் காப்பாற்றுவதற்கான இலக்குகளை எட்ட இந்தியா இப்போது பயணிக்கும் வேகம் போதாது.
இந்த வேகத்தை விரைவுபடுத்துவதற்காகத்தான் இந்தியாவில் காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.