கடலோர காவல்படையின் கிழக்குப் பிராந்திய கமாண்டர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாக செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கடலோர காவல்படையின் கிழக்குப் பிராந்திய கமாண்டர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பரமேஷ், தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது கடலோரக் காவல்படையால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு பணிகளை துணை முதல்வரிடம் அவர் எடுத்துரைத்தார். மேலும், தங்களது படைப்பிரிவின் பல்வேறு மேம்பாட்டு பணிகள் குறித்தும் அவர் விவரித்தார். குறிப்பாக தமிழகக் கடலோரப் பகுதியில், பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது. மீனவர்கள் கடலில் எப்போது துயரங்களுக்கு ஆளானாலும், அவர்களை மீட்கவும், நிவாரண உதவிகளை வழங்கும் பணியிலும் கடலோர காவல்படை தொடர்ந்து உதவும் என துணை முதல்வரிடம் உறுதி அளிக்கப்பட்டது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.