மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்த வெவ்வேறு படகு விபத்துகளில் சிக்கி உயிரிழந்த ஏழு மீனவர்களின் குடும்பங்களுக்கு, தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி, வடக்குப் பொய்கைநல்லூர் கிராமத்தின் கோவிந்தராஜ் ஆகியோர் கடலில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதி மீனவர்கள், பாம்பன் மீன்பிடி தளத்தில் இருந்து நாட்டுப் படகில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிந்தாஸ், மினோன் ஆகிய இரு மீனவர்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டன.
இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு கிராமத்தைச் சேர்ந்த சகாயம், லூர்துராஜ் ஆகிய இரண்டு மீனவர்களும் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
ஏழுதேசம் கிராமத்தைச் சேர்ந்த அருளிஸ் என்பவர், மீன்பிடி பணி முடிந்து கரை திரும்பும்போது படகு விபத்துக்குள்ளானது. படகு கவிழ்ந்து உயிரிழந்த ஏழு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.