தமிழ்நாடு மீன்வள கூட்டமைப்பு கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு மீன்வள கூட்டமைப்புக்காக கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை மீன்வளக் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தேர்தல் நடத்துவது தொடர்பாக மீன்வளத் துறை உதவி இயக்குநர் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
இதன்படி இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜூன் 24-ஆம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மீனவர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த முருகன், முனியசாமி உள்ளிட்ட 19 மீனவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்தத் தேர்தலில் நாங்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தபோது காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரி ஆகியோர் எங்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்தனர். மேலும் ஒரு சிலரிடம் மட்டுமே வேட்புமனு பெற்று தேர்தல் நடத்தாமல் அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். இந்தத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை. இந்த முறைகேடு தொடர்பாக தேர்தல் அதிகாரியான மீன் வளத்துறை உதவி ஆணையர் மற்றும் காவல் துறை ஆணையரிடமும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் மனோஜ்குமார் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது. எனவே, இந்த தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என்று கூறி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் புதிய தேர்தலை ஒரு மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.