தினம் ஒரு திருக்குறள் மற்றும் அதன் பொருள் விளக்கத்தை கூற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் வழக்குரைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கூடுதல் மாவட்ட நீதிபதி செம்மல் மகன் பழமலையை அண்மையில் சந்தித்தேன். அவர் திருக்குறள் முனுசாமி என்ற புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார். அதை படித்தபோது, நீதிபதிகள் ஹரிபரந்தாமன், ஆர். மகாதேவன் ஆகியோர் திருக்குறளின் பெருமை பற்றி கூறியது நினைவிற்கு வந்தது. தமிழர்களான நாம் குறைந்தபட்சம் 51 குறள்களையாவது தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
எனவே நான் தினமும் ஒரு குறளை படிக்க இருக்கிறேன். என்னை போன்று வழக்குரைஞர்களும் தினம் ஒரு குறளை படிக்க வேண்டும். அவ்வாறு படிக்கும் குறளையும், அதன் விளக்கத்தையும் தினம் ஒரு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கூறவேண்டும் எனஅறிவிப்பில் அறிவுறுத்தியுள்ளார்.