அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 18 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தேர்தலை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன என்று அமமுக துணை பொதுசெயலர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராமசாமியை ஆதரித்து உதகையில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வருமான வரித் துறை திட்டமிட்டு வேட்பாளர்களை சோதனை செய்வது கண்டிக்கத்தக்கது. மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மிரட்டுகின்றனர். இதற்கு காவல் துறையினரும் ஒத்துழைக்கின்றனர்.
வேலூரில் பிடிபட்ட பணம் யாருடையது என்பது மக்களுக்குத் தெரியும். தமிழகத்தில் 20 மக்களவைத் தொகுதிகளிலும் திமுகவினர் பணத்தை நம்பியே களம் இறங்கியுள்ளனர். அதனால், தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதே அமமுகவின் கோரிக்கையாகும்.
தேசிய அளவில் கம்யூனிஸ்டுகளுடன் உறவு வைத்துள்ள காங்கிரஸ், கேரளத்தில் அவர்களை எதிர்த்து போட்டியிடுவது விசித்திரமாகும்.
ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதால் பெரிதாக எவ்வித மாற்றமும் வந்துவிடாது.
அதேபோல, ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியினரே இன்னமும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்காத நிலையில் தமிழகத்தில் ஸ்டாலின் மட்டும் அறிவித்துள்ளது சிறுபான்மையினரின் வாக்குகளை கவருவதற்கான தந்திரமாகும்.
தமிழகத்தில் குக்கர் சின்னத்தை அமமுகவுக்குத் தர மறுத்த தேர்தல் ஆணையம், அச்சின்னத்தை சில சுயேச்சைகளுக்கு கொடுத்திருப்பது அமமுகவுக்கு எதிரான நடவடிக்கை என்றார்.