திமுகவை அச்சுறுத்த நினைக்கும் முயற்சி எடுபடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான அணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. அதனால், பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்றவற்றை அவர்கள் பாரபட்சமாகச் பயன்படுத்துகின்றனர். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்கள் உள்ளனர்.
முதல்வர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுகவினர் பட்டவர்த்தனமாக பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். அங்கு எல்லாம் எந்தவிதமான ஆய்வோ, சோதனையோ நடத்தவில்லை.
ஆனால், திமுகவை அச்சுறுத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். அந்த முயற்சி எடுபடாது. ஒருதலைபட்சமான நடவடிக்கையாக இருக்கிறது.சோதனையில் கிடைத்த விவரங்கள் எல்லாம் அதிகாரப்பூர்வமாக வரட்டும். பிறகு பார்ப்போம். இதுபோன்ற சோதனைகளுக்கு எல்லாம் திமுக அஞ்சாது என்றார்.