கோடநாடு குறித்து தேர்தல் பிரசாரத்தின் போது தொடர்ந்து பேசிவந்தால், அவதூறு வழக்குக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கோடநாடு விவகாரம் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால், திமுக தலைவர் ஸ்டாலின் அதுபற்றி பிரசாரங்களில் பேச தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, கோடநாடு குறித்து தேர்தல் பிரசாரத்தின் போது தொடர்ந்து பேசிவந்தால், தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளது.
மேலும் வழக்கு விசாரணையை எதிர்கொள்வதில் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் கடந்த ஜனவரி மாதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் வெளியிட்ட விடியோ ஒன்றை மையமாக வைத்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி மு.க.ஸ்டாலின் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக மார்ச் 21-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
இந்த சம்மனை ரத்து செய்து, நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.