மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஏ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற அப்பல்லோ மருத்துவமனையின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்க, உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, இந்த விசாரணை ஆணையம் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது. மேலும், இந்த மனு தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விசாரணை ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டதா இல்லையா என்ற சந்தேகம் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே தான் தமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்களைப் போக்கும் வகையில், விசாரணை ஆணையம் சிகிச்சை குறித்து எழுப்பும் கேள்விகளை, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தவறு எனக் கூறுவதை ஏற்க முடியாது. அதே நேரத்தில் ஆணையத்தின் நடவடிக்கைகள் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு இடம் அளிக்காத வகையில் ஆணையம் செயல்பட்டு இருக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் ஆணையத்துக்கு மருத்துவ தொழில்நுட்ப ரீதியாக உதவ, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து 5 அரசு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்ற அப்பல்லோ மருத்துவமனை தரப்பின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனது வரம்புக்கு உள்பட்டு விசாரணையை நடத்தும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.
ஆணையம் தனது விசாரணை அறிக்கையில், அரசுக்கு ஏதாவது பரிந்துரை செய்ய முடியுமே தவிர, யாரையும் குற்றவாளி எனக்கூற முடியாது. விசாரணை ஆணையம் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்காத நிலையில், ஆணையத்தின் செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டது எனக்கூறுவது தவறானது. மேலும், விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் தான் உள்ளது. அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்போது, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு இயற்கை நீதியின் அடிப்படையில் உரிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். விசாரணை ஆணையம் இதுவரை, 5 எய்ம்ஸ் மருத்துவர்கள், 56 அப்பல்லோ மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என 154 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. ஏறத்தாழ 90 சதவீத விசாரணை முடிவடைந்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்கும் நேரத்தில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. அப்படி தடை விதித்தால், அது இந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைத்துவிடும். எனவே மனுதாரரின் இரண்டாவது கோரிக்கையையும் ஏற்க முடியாது என உத்தரவிட்டு, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.