11 இடங்களில் வெயில் சதம்: கரூர்பரமத்தியில் 106 டிகிரி
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக, கரூர்பரமத்தியில் 106 டிகிரி வெப்பநிலை பதிவானது.
வேலூர், சேலத்தில் தலா 105 டிகிரி, தருமபுரி, திருச்சி, திருத்தணியில் தலா 104 டிகிரி, கோயம்புத்தூர், மதுரை தலா 103 டிகிரி, நாமக்கல், பாளையங்கோட்டையில் தலா 102 டிகிரி, தொண்டியில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:
தமிழகத்தில் சில இடங்களில் சனிக்கிழமை (ஏப்.13) வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், குமரிக்கடலில் இருந்து தமிழகம் வழியாக உள் கர்நாடகம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஏப்.13) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதிகபட்சமாக வெப்பநிலை 96 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும்.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 30 மி.மீ. மழை பதிவானது என்றார் அவர்.