தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (செவ்வாய்கிழமை) மாலையுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள கீதா ஜீவன் இல்லத்தில் கனிமொழி தங்கி வருகிறார். அவரது வீட்டுக்கு அருகே திமுகவின் தேர்தல் அலுவலகமும் உள்ளது. இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் 10 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் சோதனை நடத்த தொடங்கினர்.
கனிமொழி தங்கியிருக்கும் வீட்டுக்கு உள்ளேயும், வீட்டில் இருந்து வெளியேவும் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் இருப்பவர்களிடம் உள்ள ஃபோன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் தரப்பில் இருந்து தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.
முன்னதாக, தேர்தல் ஆணையம் வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்தது. இந்த அறிவிப்பு வெளியாகி சுமார் 1 மணி நேரத்துக்குள் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.