மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அநீதி இழைத்துவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனுக்கு வாக்கு கேட்டு காங்கயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை பேசியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்துள்ளோம். ஆனால், காங்கிரஸ்-திமுக கூட்டணியில் ஸ்டாலின் மட்டுமே ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். மற்றவர்கள் தேர்தல் முடிந்த பிறகு பிரதமரை முடிவு செய்வோம் என்கின்றனர்.
8 வழிச் சாலை: போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், புறவழிச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டும். நிலம் கையகப்படுத்தாமல் சாலை அமைக்க முடியாது. எட்டு வழிச் சாலை என்பது மாநில அரசின் திட்டமல்ல, அது மத்திய அரசின் திட்டம் ஆகும். மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகும்.
எட்டுவழி பசுமை வழிச் சாலைக்காக மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விவசாயிகளை அழைத்துப் பேசி அவர்களின் ஒப்புதலோடு நிலத்துக்கான சந்தை விலை வழங்கித்தான் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு நான் பதிலளித்தபோது, கடந்த 2001-ஆம் ஆண்டு ஒரு லட்சம் வாகனங்கள் சென்ற சாலையில் தற்போது 3 லட்சம் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே பசுமை வழிச்சாலை அவசியமானதாகும் என்று கூறினேன்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக டி.ஆர். பாலு இருந்தபோது சாலைப் பணிகளுக்காக 800 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது, விவசாயிகள் பாதிக்கப்படவில்லையா? அவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படவில்லை.
தற்போது, ஏக்கருக்கு சந்தை விலையில் ரூ. 48 லட்சம் வரை மத்திய அரசு தரத் தயாராக இருக்கிறது. மேலும், கையகப்படுத்தும் பகுதியில் தென்னை மரங்கள் இருந்தால், மரத்துக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படுகிறது.
மின் கட்டணத்தில் ஒரு பைசா குறைக்கக் கோரி திமுக ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
மேக்கேதாட்டு விவகாரம்: கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என்று தெரிவித்ததோடு, காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்
படும் என்றும் கூறியுள்ளார்.
மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் 20 மாவட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். போராடிப் பெற்ற தீர்ப்பை ராகுல் கொச்சைப்படுத்துகிறார். தமிழக மக்களுக்கு ராகுல் காந்தி அநீதி இழைக்கிறார். இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்?
காங்கயத்தில் காளை சிலை: காங்கயம் காளைகளை சிறப்பிக்கும் விதமாக காங்கயத்தில் பிரம்மாண்டமான காங்கயம் காளை சிலை அமைக்கப்படும் என்றார்.