புதுச்சேரி முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையடுத்து உரிய ஆவணங்களின் இன்று கொண்டு செல்லப்படும் பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன.
அதுபோன்று, அரசியல் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்களின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அவரது உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.11 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அது எந்தெந்த பகுதி வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற பட்டியலும் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி நட்சத்திர வேட்பாளர் கனிமொழி வீட்டிலும் செவ்வாய்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவருமான என்.ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் புதன்கிழமை மதியம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.