தமிழ்நாட்டில் உள்ள தேசியவாதிகள் டிடிவி. தினகரனை ஆதரிக்க வேண்டும் என்ற சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து பாஜகவைப் பாதிக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
கோவை, செட்டி வீதியில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரத்தில் பங்கேற்ற இல.கணேசன், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தத் தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல். இந்தத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியும் விலைவாசி குறித்துப் பேசவில்லை. அந்த அளவுக்கு விலைவாசியை பாஜக கட்டுக்குள் வைத்துள்ளது. நாடு, வீடு, மாடு காக்க மோடிக்கு வாக்களிக்க வேண்டும். நாட்டு மாடுகளைக் காக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் பாஜக வெற்றி பெறும். தேசியவாதிகள் டிடிவி. தினகரனை ஆதரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து. அவரது கருத்து பாஜகவை ஒருபோதும் பாதிக்காது என்றார்.