மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் கள்ளழகர் சூடிக் கொள்வதற்காக ஆண்டாள் சூடிய மங்கலப் பொருள்களை அனுப்பும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது.
மதுரையில் சித்ரா பெüர்ணமியன்று வைகை ஆற்றில் கள்ளழர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 19) அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. இதையொட்டி வியாழக்கிழமை நள்ளிரவில் தல்லாகுளம், பிரசன்ன வெங்கடேசுவரர் திருக்கோயிலில் ஆண்டாள் சூடிக் கொடுத்த மங்கலப் பொருள்களை அழகர் சூடிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.
இதற்காக ஆண்டாளுக்கு விஷேச மாலை, கிளி, புது வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து மங்கலப் பொருள்கள் தக்கார் கி.ரவிச்சந்திரன் தலைமையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் திருவீதி உலாவாக எடுத்து வரப்பட்டது. இதைத் தொடர்ந்து மங்கலப் பொருள்கள் மதுரைக்கு அனுப்பி வைக்கும் வைபவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து ஆண்டாளை தரிசித்தனர்.