சென்னை: தமிழகத்தில் வியாழனன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் 71.90% வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
இந்தியாவில் 17-ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இரண்டாவது கட்ட தேர்தலாக வியாழக்கிழமையன்று தமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகள் (வேலூர் தவிர்த்து), கர்நாடகத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிரத்தில் 10 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், அஸ்ஸாம், பிகார், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மாநிலங்களில் தலா 3 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகள், மணிப்பூர், புதுச்சேரியில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தைப் பொறுத்தவரை வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. மதுரையில் மட்டும்சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வியாழன் இரவு 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். இன்னும் ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் இறுதியான நிலவரம் குறித்து தெரியவில்லை. தமிழகத்தில் மொத்தம் பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் குறித்த இறுதியான நிலவரம் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் வியாழனன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் 71.90% வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளியன்று மாலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் வியாழனன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் 71.90% வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து நடைபெற்ற 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 75.56% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.