புதுக்கோட்டையில் இன்று டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து வாட்ஸ் அப்பில் (கட்செவி அஞ்சல்) அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆயிரக்கணக்கானோர் நேற்று காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்கள் போலீஸார் மீது திடீரென கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில், போலீஸாரின் 8 வாகனங்கள் சேதமடைந்தன. மூன்று போலீஸார் மற்றும் பொதுமக்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தியும் நிலைமை கட்டுக்குள் வராததால், துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களைக் கலைத்தனர். இச்சம்பவத்தால், பொன்னமராவதி பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
பொன்னமராவதி ஒன்றியத்தில் ஆங்காங்கே சாலையின் குறுக்கே மரங்களைப் போட்டு அச்சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொன்னமராவதி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மேலும் அசம்பாவித சம்பவம் நிகழாமல் தடுக்க அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.