திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சனிக்கிழமை சந்தித்தனர்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை வைகோ சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வைகோ கூறியது:
திமுக கூட்டணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுகவுக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவித்தோம். தருமபுரி நத்தம்மேடுவிலும், சிதம்பரம் பொன்பரப்பியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றார் வைகோ.
தொல். திருமாவளவன்: மு.க.ஸ்டாலினை தொல்.திருமாவளவனும் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியது: தமிழகம் முழுவதும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ததற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தோம். 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரசாரம் மேற்கொள்வோம். மக்களவைத் தொகுதிகளில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். சிதம்பரம் தொகுதியில் அடங்கிய பொன்பரப்பியில் மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றார்.