புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டன. கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. பொன்னமராவதியில் அமைதி திரும்பியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைப் பற்றி கட்செவி அஞ்சலில் அவதூறாகப் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அச்சமூகத்தினர் திரண்டு பொன்னமராவதியில் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், 8 போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 3 போலீஸார் காயமடைந்தனர்.
இதையடுத்து, மத்திய மண்டல ஐ.ஜி வி.வரதராஜூலு, டிஐஜி லலிதா லட்சுமி ஆகியோர் தலைமையில் சுமார் 800 போலீஸார் பொன்னமராவதியில் முகாமிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் வரும் 21 ஆம் தேதி வரை பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக சனிக்கிழமை அடையாளம் தெரியாத 1,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.