கல்லூரிகளில் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கையின்போது இட ஒதுக்கீட்டை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. குறிப்பாக கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே மாநிலத்தில் பெரும்பாலான தனியார் கலை கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றுவதில்லை. பிற வகுப்புக்கான இடஒதுக்கீட்டில் வேறு பிரிவினர்களை முறைகேடாகச் சேர்ப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், இது தொடர்பாக, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம்சர்மா வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்குநர் தலைமையிலான குழு தயார் செய்து அரசுக்கு அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது மாணவர் சேர்க்கைக்கான விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இதை 2019-2020-ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையின்போது அனைத்து கல்லூரிகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும். அதேபோல், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாணவர்களுக்கு தரப்படும் தகவல் கையேட்டில் வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும். இதில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றால், கல்லூரி முதல்வரே அதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.