ஆசிய தடகள போட்டியின் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கத்தார் நாட்டின் தோஹா நகரில் ஆசிய தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்றார்.
இவருடைய இந்த சாதனைக்கு பல தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த வரிசையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் அனுப்பிய வாழ்த்து கடிதத்தில்,
"திருச்சியை சேர்ந்த தாங்கள் தற்பொழுது கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடைபெற்று வரும் 2019-ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தங்களுக்கு என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் இதுபோன்று சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, மேலும் பல வெற்றிகள் பெற்று, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் எனவும், அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.