சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர். 52 பேர் காயமடைந்தனர்.
கண்டரமாணிக்கம், மாணிக்க நாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. மஞ்சுவிரட்டையொட்டி வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் கிராமத்தார்கள் கோயில் மாடுகளுடன் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து தொழு மாடுகளுக்கு வேட்டி துண்டுகள் கட்டினர். பின்னர் தொழுவிலிருந்து வாடிவாசல் வழியாக 50-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலுக்குள் குறைந்த அளவே மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக வாடிவாசலுக்கு வெளியே கண்மாய் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில், திருச்சி, தஞ்சை, மதுரை, அறந்தாங்கி, காரைக்குடி, மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து நூற்றுக்காணக்கான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கூட்டத்திற்குள் புகுந்த மாடு முட்டியதில் அமராவதி புதூரைச் சேர்ந்த கருப்பையா மகன் சேவுகன் (45), மாடுபிடி வீரர் கே.வளையபட்டியை சேர்ந்த அம்மாசி மகன் ராஜூ (23) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அழகாபுரியைச் சேர்ந்த சின்னக்கருப்பன் மகன் சின்னச்சாமி(38), இளங்கோவன் (23), குமார்(42), சின்னக்கருப்பன் (42), சரவணன் (26), சின்னையா (65), செல்வமணி (29) உள்ளிட்ட 52 பேர் காயமடைந்தனர். இதில் 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகங்கை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.