மதுரையில் வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வேட்பாளர் முறையீடு செய்துள்ளார்.
மதுரை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி முடிந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்று அடுக்குப் பாதுகாப்புடன் மதுரை மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சனிக்கிழமை பெண் அதிகாரி உள்பட 4 பேர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குச் சென்று அங்கிருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வேட்பாளர் சு.வெங்கடேசன் முறையீடு செய்துள்ளார்.
அப்போது இதனை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உறுதியளித்தது. இதையடுத்து அவர் தனது கோரிக்கையை மனுவாக விரைவில் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.