தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இது தற்பொழுது சென்னைக்கு தென்கிழக்கே 1125 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது 24 மணி நேரத்தில் தொடர்ந்து வலுப்பெற்று தீவிரப் புயலாக மாறும்.
வட மேற்கு நோக்கி நகர்ந்து 30ம் தேதி மாலை வட தமிழகம் - தெற்கு ஆந்திரா அருகே நகரக் கூடும். தற்போதைய நிலவரப்படி கரையைக் கடப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ளது. 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் ஃபானி புயல் சென்னையை நெருங்கவும் வாய்ப்பு குறைவு. அதே சமயம், கரையைக் கடக்கவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
ஒரு வேளை புயல் கரையைக் கடந்தால் சென்னையில இருந்து 300 கி.மீ தொலைவில்தான் அது நிகழும். திசை மாறும் காரணத்தால் ஃபானி புயல் வலு குறைய வாய்ப்பு உள்ளது.
ஃபானி புயல் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்குத்தான் வாய்ப்பு உள்ளது. ஃபானி புயல் வேகமாக வலுப்பெற்று வடமேற்காக நகர்கிறது. இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.